-->
Showing posts with label கூட்டு மரண தோஷம். Show all posts
Showing posts with label கூட்டு மரண தோஷம். Show all posts

2015-12-17

The plague of death | Vedic Astrology | Tamil Jothidam Tips

கூட்டு மரண தோஷம்
----------------------------------------
நாடி ஜோதிடத்தில் குருவிற்கு ஜீவக்காரகன் என்றும், ராகுவிற்கு மரணக்காரகன் என்றும் பெயர், பாரம்பரிய ஜோதிடத்தில் குருவும், ராகுவும் சேர்க்கை பெற்றிருந்தால் அதை குரு சண்டாள யோகம் என்று கூறுவர். ஆன்மீக ஆச்சாரங்களைக்குறிக்கும் கிரகம் குருவாகும், ஆன்மீகத்திற்கு எதிரான அனாச்சாரங்களை குறிக்கும் கிரகம் ராகுவாகும்.
குருவின் காரகங்கள்
உயிர்(ஜீவன்), ஜீவாத்மா, நல் தேவதைகள், புண்ணிய ஆத்மாக்கள், சாத்வீக எண்ணம், ஆத்ம சிந்தனை, மதபோதனை, வேதவித்யை, தர்ம சிந்தனை, மத குருக்கள், தெய்வபக்தி, ஆத்திகம், தேவாலயம், சமூக சேவகர்கள்.
ராகுவின் காரகங்கள்
மரணம்,பிணம், சுடுகாடு, துர்தேவதைகள், ஆவிகள், பேய்கள், பிசாசுகள், யட்சினி பிசாசுகள், மாந்தரீகம், ஏவல்,பில்லி,சூனியம், அனாச்சாரம், அபிச்சாரம், நாத்திகம், சமூக விரோதிகள், சாக்கடை, விசம், மாமிசம், கள், சாராயம், விஷவாயு, வெடிமருந்து, புகையிலை, பீடி, சிகரெட், பூச்சிமருந்து
குருவினுடைய காரகங்களையும், ராகுவினுடைய காரகங்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். இவ்விரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று நேர் எதிர்மாறான காரகத்தன்மைகளைக் கொண்டவையாகும். ஒன்றுக்கொன்று ஒவ்வாத தன்மைகளைக் கொண்ட இரு கிரகங்கள் சேர்க்கைப்பெற்றால் அவ்விரண்டு கிரகங்கள் குறிக்கும் காரகங்களும் பாதிக்கப்படும்.
கோட்சாரத்தில் குருவும், ராகுவும் ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் உலகத்தில் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.
1. மத கலவரங்கள் உண்டாகும்.
2. நாத்திகவாதிகளின் கை ஓங்கும்.
3. பொய் பித்தலாட்டங்கள் அதிகரிக்கும்.
4. சமூக விரோத சக்திகளின் கை ஓங்கும்.
5. மனிதர்கள் கூட்டம் கூட்டமாக மடிவார்கள்.
6. ஊனமுற்ற குழந்தைகள் அதிகமாக பிறக்கும்.
7. அதிகப்படியான பெண்கள் அமங்கலியாவார்கள்
8. மக்கள் அகதிகளாவார்கள்
9. வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரிக்கும்.
10. இயற்கை சீற்றங்களால் கூட்டம் கூட்டமாக மக்கள் மடிந்து போவார்கள்.
11. ஆலயங்கள் தகர்க்கப்படும்.
12. ஆன்மீகவாதிகள் தாக்கப்படுவார்கள்
13. ஆலயங்களுக்கு சேதம் உண்டாகும்.
14. நில நடுக்கம் ஏற்படும்
15. பெற்ற குழந்தையை தாய் தூக்கி எறிவாள்
16. முறை தவறி குழந்தைகள் பிறப்பார்கள்
17. சர்வாதிகாரம் தலை விரித்தாடும்
18. நீதித்துறை செயலிழக்கும்
19. விபச்சாரம் கொடிகட்டி பறக்கும்.
20. ஆலயங்களுக்குள் விபச்சாரம் நடக்கும்.
21. கன்யா ஸ்தீரிகள் கற்பழிக்கப்படுவார்கள்
22.பொய்யான குருமார்கள் தோன்றுவார்கள்.
கோட்சார குருவுக்கு 1-5-9 அல்லது 2ல் கோட்சார ராகு இருந்தால் அதை குரு ,ராகு சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம்.
செப்டம்பர் 2001ல் கோட்சாரத்தில் குருவும் , ராகுவும் இணைந்து மிதுன ராசியில் சஞ்சரித்தார்கள். அச்சமயம் அமெரிக்க வர்த்தக நிறுவனத்தை ஆப்கான் தீவிரவாதிகள் விமானத்தால் மோதி தகர்த்தார்கள். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். இதற்கு பதிலடியாக அமெரிக்க நாடு , ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. போரில் பல்லாயிர்க்கணக்கானவர்கள் மடிந்தனர். ஆப்கன் மக்கள் நாட்டை விட்டு ஓடி அன்னிய நாடுகளில் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டது. இந்த காலக்கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள புத்தர் சிலை தீவிரவாதிகளால் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. அமெரிக்காவை குறிக்கும் ராசி மிதுனமாகும். ஆப்கானிஸ்தானை குறிக்கும் ராசி கும்பமாகும்.
2004 ல் சிம்மத்தில் குருவும், மேசத்தில் ராகுவும் ஒருவருக்கொருவர் திரிகோணமாக சஞ்சரித்த காலத்தில் ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண வீட்டில் தீவிபத்து ஏற்பட்டு அதில் பலர் இறந்து போனார்கள்.
16-07-2004 அன்று கும்பகோணம் பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு அதில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து போனார்கள். அந்த காலக்கட்டத்தில் மேசத்தில் ராகுவும், சிம்மத்தில் குருவும் சஞ்சரித்தார்கள்.
நாடி ஜோதிடத்தில் குரு,ராகு சேர்க்கைக்கு கூட்டு மரண தோஷம் என்று பெயர். அதாவது ஜீவனை அல்லது ஜீவாத்மாக்களைக்குறிக்கும் கிரகம் குருவாகும். மரணத்தைக்குறிக்கும் கிரகம் ராகுவாகும்.இவ்விரண்டு கிரகங்களும் சேர்க்கை பெறும்போது உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக அழிந்து போகும்.
குரு,ராகு சேர்க்கை நெருப்பு ராசிகளில் ஏற்பட்டால் நெருப்பினாலும், நீர் ராசிகளில் ஏற்பட்டால் மழை , வெள்ளத்தாலும், காற்று ராசிகளில் ஏற்பட்டால் விமான தாக்குதல், வெடிகுண்டு வீசுதல், விஷவாயு தாக்குதல் இவைகளாலும், நில ராசிகளில் ஏற்பட்டால் நிலசரிவு, பூகம்பம், எரிமலை சீற்றம் இவைகளாலும் துர் மரணங்கள் நிகழும்.
ஒவ்வொரு ராசியும் உலகியல் ஜோதிடப்படி, சில நாடு ,நகரங்களைக்குறிக்கும். எனவே கோட்சாரத்தில் குருவும், ராகுவும் இணைந்து எந்த ராசியில் சஞ்சரிக்கிறார்களோ அந்த ராசி மற்றும் அந்த ராசிக்கு திரிகோண ராசிகள் குறிக்கும் நாடு, நகரங்களில் இது போன்ற துர் மரணங்கள் அதிகமாக நிகழும். இதற்கு முக்கிய காரணம் தெய்வ நம்பிக்கை குறைவு, மதம் மற்றும் தெய்வ நம்பிக்கைகளுக்கு எதிரான செயல்கள் அதிகரித்தல் ஆகும்.
குரு,ராகு சேர்க்கை கோச்சாரத்தில் ஏற்படும் காலங்களில் , அந்த சேர்க்கை எந்த வகை ராசியில் ஏற்படுகிறதோ , அந்த ராசியின் தன்மைகளை அறிந்து கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டால், இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறுவதை ஓரளவுக்கு தடுக்கலாம். குறிப்பாக திருமண விழாக்கள், பொது க்கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தும்பொழுது முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும் அல்லது குரு,ராகு சேர்க்கை ஏற்படும் காலங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவேண்டும்.
14-07-2015 முதல் 11-08-2016 வரை குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். 29-02-2016 முதல் 18-08-2017 வரை ராகு சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே 29-02-2016 முதல் 11-08-2016 வரை சிம்ம ராசியில் குரு,ராகு சேர்க்கை ஏற்படப்போகிறது. சிம்ம ராசி நெருப்பு ராசியாகும். எனவே தமிழ் நாட்டில் மேச ராசிப் பகுதியான வேலூர்,திருவள்ளூர்,திருவண்ணாமலை, சிம்ம ராசிப் பகுதியான தஞ்சாவூர்,கும்பகோணம், திருச்சி, பெரம்பலூர், தனுசு ராசிப் பகுதியான திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் போன்ற ஊர்களில் தீவிபத்துக்களால் மக்கள் கூட்டமாக மடிந்து போகும் வாய்ப்புகள் உள்ளது. இந்த காலக்கட்டத்தில் அந்த ஊர்களில் உள்ள மக்கள் மிருத்யுஞ்சய மந்திர ஜெபம், ருத்திர ஜெபம், சுதர்சன மந்திர ஜெபம், விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் செய்தால், கெடு பலன்கள் நடவாமல் போகும்.



By Ravi Sankaran

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP